நடைபெற்று முடிந்த மக்களைவைத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை முதல் இந்தியா முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் உள்ளது. இதன் மூலம் கேரள மாநில மக்களவைத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பாஜக வெற்றிக்கான பிள்ளையார் சுழி போட்டு வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.
கேரளாவில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வென்றதில்லை. நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கி இருக்கிறது. திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி 400553 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுனில்குமாரை விட 73148 வாக்குகள் முன்னிலை பெற்று இருக்கிறார்.
திருச்சூர் மக்களவை தொகுதி மொத்தம் 14,83,055 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். நடந்த முடிந்த தேர்தலில் மொத்தம் 10,81,147 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். இதில் தற்போது வரை 10,53,770 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணவேண்டி இருக்கிறது. இதன் மூலம் நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சென்ற 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவை தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு 28.2 சதவிகித வாக்குகளைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த முறை திருச்சூர் தொகுதியை கைப்பற்ற பாஜக தலைவர்கள் பலரும் பல்வேறு வியூங்களை அமைத்தனர். அதையடுத்து, தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் மீண்டும் சுரேஷ் கோபியை வேட்பாளராகக் களமிறக்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இதற்கு உறுதுணையாக பிரதமர் நரேந்திர மோடி திருச்சூரில் 'ரோடு ஷோ' நடத்தியதும், கிறிஸ்தவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதும் பாஜகவுக்கு கூடுதல் பலத்தை தந்தது. அதன்பலனாக தற்போது நடிகர் சுரேஷ் கோபி கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் வெற்றியைக் கண்டு இருக்கிறார்.