

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக வெற்றியைப் பெறாமல் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே பெற்றது. இந்நிலையில் இம்முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களத்தில் இறங்கிய அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்றது. இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் இபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவி.சண்முகம் தலைமையிலான அணி ஏற்கனவே இபிஎஸ்-யிடம் தெரிவித்திருந்தது. இதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது சிவி.சண்முகம் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் ஒரு புதிய அதிமுக அணி களத்தில் இறங்கியுள்ளது.
இதன்படி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் விஜய்யை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகையால் எங்கள் தலைமையிலான அதிமுக அணி தவெக-வுக்கு ஆதரவாதிக்கிறது என சிவி.சண்முகம் மற்றும் எஸ்பி.வேலுமணி ஆகியோர் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் கூட்ட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள அதிமுக-வில் தலைமை மாற்றப்பட்டால் மட்டுமே கட்சி நிலைத்திருக்கும் என அவர்கள் கூறினர்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து, இபிஎஸ் முதல்வராக வேண்டும் என நினைத்தார். அதற்கு நாங்கள் யாரும் சம்மதிக்கவில்லை. கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம்.
இந்நிலையில் இது நடந்தால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். இந்த நிலையில் தான் தற்போது அதிமுகவின் தலைமையை மாற்ற வேண்டும் என நாங்கள் நினைத்தோம்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்பி.வேலுமணிக்கு ஆதரவாகவே கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் இன் தலைமை முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. மேலும் சிவி.சண்முகம் மட்டும் தனியாக பொறுப்பு ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இனி அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை. புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்க நினைத்தோம். அதனால் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.