

கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், நேற்று பெரம்பூர் எம்எல்ஏ-வாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் விஜய் அமலுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டில் 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள 255 டாஸ்மாக் கடைகள் அடுத்த 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளன.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிக அருகில் உள்ள கடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் தற்போது 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார் விஜய்.
கடந்த ஆட்சியிலும் ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களிலேயே 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் அந்தக் கடைகளில் வேலை பார்த்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் இப்போதும் அதே மாதிரி மூடப்பட உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.
ஏனெனில் தற்போது மூடப்படும் கடைகள் அனைத்தும் அதிக வருமானம் ஈட்டும் கடைகளாகும். குறிப்பாக பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள கடைகள் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர் மற்றும் 2 சேல்ஸ்மேன்கள் உட்பட குறைந்தது 5 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 717 கடைகள் என்றால் கிட்டத்தட்ட 3,585 பணியாளர்களை வேறு கடைகளுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கடைகளை மூடுவதன் மூலமாக வரும் வருமான இழப்பை முதல்வர் விஜய் எப்படி கையாள போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இருப்பினும் மூடப்பட உள்ள மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு மாற்று வேலையாக தமிழ்நாடு வாணிபக் கழகத்தால் இயங்கும் வேறு ஏதேனும் கடைகளில் பணி மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் மது விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே இந்த 717 கடைகளின் மூடல் இருப்பதாக தெரிகிறது. போதைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை இளைஞர்கள் மத்தியில் குறைக்க வேண்டுமெனில், முதலில் அவை எளிதாக விற்பனையாவதை தடுக்க வேண்டும் என்பதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.