

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக எதிர்பார்த்ததை விடவும் குறைந்த இடங்களிலேயே வெற்றியை பெற்றது. முதல் முறையாக அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது தமிழக வெற்றிக் கழகம் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத அதிமுக, இம்முறையும் ஆட்சியில் இல்லாததால் அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக இதுவரை 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். அதில் 4 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியும் அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மே 25ஆம் தேதி பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
அதற்கு அடுத்த நாளே மே 26 ஆம் தேதி அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். அதிமுக எம்எல்ஏ-க்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியில் வரிசையாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 16-ல் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று (ஜூன் 29) கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்தார். இதனால் சட்டமன்றததில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது எஸ்.பி.வேலுமணியும் ராஜினாமா செய்து விட்டால் அதிமுகவின் பலம் 40 ஆக குறைந்து விடும்.
நேற்று முன்தினம் (ஜூன் 28) தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனது ஆதவாளர்களை திரட்டி, ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக அல்லது தவெக ஆகிய 2 கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் எஸ்.பி.வேலுமணி இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி பதவி ஏற்பதற்கு முன்பாக, தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதிமுகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் இபிஎஸ் இதனை மறுத்து விட்டதால், அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதன்பிறகு சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக இபிஎஸ் - எஸ்.பி.வேலுமணி என இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டது.
அதிமுக எம்எல்ஏ-க்களை சமானதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிய இபிஎஸ், அதில் வெற்றி கண்டதால், மீண்டும் அதிமுக ஒரே அணியாக இணைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் எஸ்.பி.வேலுமணி அதிமுக-வில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், வேலுமணியும் ராஜினாமா செய்து விட்டால் அது அதிமுகவிற்கு பாதகமாக அமைந்து விடும்.
இனி அதிமுக-வை மீட்டெடுப்பது இபிஎஸ்-க்கு சுலபமான காரியமாக இருக்காது. இதுதவிர திமுக - அதிமுக கூட்டணி உருவாகவும் வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன