

சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசிகள் உள்பட பல இந்தியத் தொழிலாளர்கள், தலையில் கேமரா அல்லது ஸ்மார்ட்போனைப் பொருத்திக்கொண்டு தங்களின் அன்றாட வீட்டு வேலைகளைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.250 வரை ஊதியம் பெறுகின்றனர். டெஸ்லா மற்றும் ஃபிகர் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் மனித உருவ ஏஐ ரோபோக்களுக்கு (Humanoid Robots) மனிதர்களின் அசைவுகளைப் பயிற்றுவிக்க இந்த முதல் நபர் (Egocentric) வீடியோ தரவுகள் பயன்படுகின்றன. இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று கற்றுக்கொடுப்பதற்காக, சாதாரண இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் தலையில் கேமராக்களைப் பொருத்திக்கொண்டு அன்றாட வேலைகளைச் செய்யும் புதிய நடைமுறைதான் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே செய்யறிவு (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் செய்யறிவு இயந்திரங்கள் ஆக்கிரத்து வரும் நிலையில், விரைவில் வீட்டு வேலைகளையும் ஆக்கிரமிக்கவுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பலருக்கு நேரமின்மை பெரும் சவாலாக உள்ளது. வீட்டு வேலைகளை எளிமையாக்க மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் எனப் பல இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்திக் கூட வீட்டு வேலைகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சரி வீட்டு வேலைக்கு ஆள் வைத்து கொள்ளலாம் என்றால், வீட்டு வேலைகளுக்கு வருவோர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதால் பலர் இயந்திரங்களையே மட்டுமே நம்பும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் வீட்டு வேலைகளைச் செய்ய செய்யறிவு (AI) இயந்திரங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். ஏஐ இயந்திரங்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய மனிதர்களின் அசைவுகளைக் கற்றுக்கொடுக்கும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் கேமராவை பொருத்திக்கொண்டு கையுறை போன்று இருக்கும் இயந்திர கைகளை பொருத்திக்கொண்டு வீட்டு வேலைகளை அப்பெண்கள் செய்கின்றனர். வேலைகளைச் செய்யும்போது கைகளின் அசைவுகளை தலையில் இருக்கும் கேமரா மூலம் ஏஐ இயந்திரம் வீடியோ பதிவு செய்துகொள்கிறது.
இயந்திரங்கள் நிஜ உலக சூழலில் மனிதர்களைப் போலவே இயங்க, மில்லியன் கணக்கான மணிநேர உண்மையான மனிதர்களின் செயல்பாட்டு வீடியோக்கள் தேவைப்படுகின்றன.
அதன்படி, இந்திய பெண்கள் வீட்டு வேலைகளில் தங்களின் கை, உடல் அசைவுகளை பதிவு செய்து ஏஐ ரோபோக்களுக்கு(AI Robot) பயிற்சி அளித்து வருகின்றனர்.
(ஏஐ ரோபோக்கள்) ரோபோக்களால் சமையல் செய்தல், காய் நறுக்குவது போன்ற நுட்பமான மனிதச் செயல்களை கணினி உருவகங்கள் (Simulations) மூலமாக மட்டும் கற்றுக்கொள்ள முடியாது.
எனவே சமையல் செய்தல், துணி மடித்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, காய்கறி வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், வீடு சுத்தம் செய்தல், பொருள்களை துடைத்து அடுக்குவது என சாதாரண வீட்டு வேலைகளைச் செய்யும்போது, பெண்கள் தலையில் பொருத்தியுள்ள கேமரா மூலம் அந்த அசைவுகள் பதிவு செய்யப்படுகின்றன.
காணொலி தரவுகள் சேகரிக்கும் நிறுவனங்கள் மூலமாக இந்த வீடியோக்கள் பிரத்யேக செயலிகள் வழியே பெறப்பட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் காணொலி தரவுகள் வீட்டு வேலைகளை செய்யும் ஏஐ ரோபோக்களை உருவாக்குவதற்கான பயிற்சி தரவாக பயன்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அதாவது இந்த வீடியோக்களை பிரத்யேக செயலி வழியாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி AI நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.
வீட்டிலிருந்தபடியே குறைந்த நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட இது ஒரு புதிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஒருமணி நேரத்திற்கு ரூ.250 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சாதாரண இல்லத்தரசிகள் முதல் சாலையோரத் தொழிலாளர்கள் வரை பலரும் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த நேரத்தில் எளிய முறையில் பணம் கிடைப்பதால் பல பெண்கள் இந்த வேலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், இது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கினாலும், எதிர்காலத்தில் எளிய தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில், தலையில் கேமராவுடன் இந்தியர்கள் வீட்டு வேலை செய்வதோ அல்லது பூ கட்டுவதோ பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன வேலையும் நாளைய அதிநவீன ரோபோக்களுக்கான வழிகாட்டியாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் நமது கடினமான வேலைகளை எளிதாக்க உதவினாலும், சாதாரண உழைப்பாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஆபத்தும் இருக்கிறது.
எனவே, தொழில்நுட்ப வளர்ச்சியும், எளிய மக்களின் வேலைவாய்ப்பும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுப்பது காலத்தின் கட்டாயம்.