7 கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடக்கப் போகிறது. இந்த நாளுக்கு அடுத்து இனி 2040ம் ஆண்டுதான் மீண்டும் நிகழும்.
பிரபஞ்சத்தில் ஏராளமான அதிசயங்களும், அதிசய நிகழ்வுகளும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பல வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அரிய நிகழ்வுகள் பேரதிசயங்கள்தானே?
ஆம்! வரும் பிப் 28ம் தேதி அப்படி ஒரு நிகழ்வுதான் நடைபெறப்போகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், சூரியனைச் சுற்றி ஒரே கோட்டில் அதாவது எக்லிப்டிக் (ecliptic) எனப்படும் தளத்தில் சுற்றி வருகின்றன. எனவே தான், சூரிய குடும்பத்தின் கோள்கள் எப்போதும் ஒரு கோட்டில் எங்காவது தோன்றுவதைப் பார்க்க முடிகிறது.
அந்தவகையில் நமது சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதனை பூமியில் இருந்தே நாம் வெறும் கண்களில் பார்க்க முடியுமாம்.
இதன் அணிவகுப்பு கடந்த மாதமே தொடங்கிவிட்டதாம். இந்த நிகழ்வின் உச்சமாக வரும் 28ம் தேதி 7 கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாம். அதாவது சூரிய குடும்பத்தின் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட 7 கோள்கள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.
பொதுவாக நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களே ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அரிது. ஆனால், இம்முறை 7 கோள்கள் நேர்கோட்டில் வந்தால் எவ்வளவு பெரிய அதிசயம்.
இந்த நிகழ்வை நீங்கள் பிப் 28ம் தேதி சூரிய அஸ்தமனாவதற்கு பின் 45 நிமிடங்கள் கழித்துப் பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியன் மறைந்த பின்னர் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) ஆகிய கோள்களை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
ஆனால், சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட கோள்கள் நீங்கள் வெறும் கண்களால் பார்க்க இயலாது. நல்ல பைனாக்குலர் கொண்டோ அல்லது டெலஸ்கோப் கொண்டோ நீங்கள் அவற்றை பார்க்கலாம்.
அதேபோல் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு திசையில்தான் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.