அமலுக்கு வந்த தேர்தல் விதி : அமைச்சர்கள் இனி இதையெல்லாம் செய்ய முடியாது..!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை மார்ச் 15-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 23-ம்தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலும், மே 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
* தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களின் பிரச்சாரங்களுக்காக அரசின் வாகனங்கள், அரசு விமானம், ஹெலிகாப்டர்கள் அல்லது அரசு அதிகாரிகளை பயன்படுத்த முடியாது.
* அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த சின்னங்கள், பெயர்கள், விளம்பரங்கள் மற்றும் வாசகங்கள் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக அகற்ற வேண்டும். அதேசமயம், பேருந்து நிலையங்கள், மின் கம்பங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை அகற்ற 48 மணி நேரமும், தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்ற 72 மணி நேரமும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
* அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை விளக்கும் செய்திகள் உடனடியாக நீக்க வேண்டும். அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
* அரசு அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது. அதேபோல் அரசு திட்டங்கள் தொடர்பாக கல்வெட்டுகளில் இடம்பெற்று உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் மறைக்கப்படும்.
* பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பாக கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் மறைக்கப்படும். குறிப்பாக, அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு அடியில் உள்ள கட்சிச் சின்னங்கள் கண்ணில் படாதவாறு மூடப்படும்.
* அமைச்சர்களின் தனிப்பட்ட அல்லது தேர்தல் சார்ந்த கூட்டங்களில் எந்தவொரு அரசு அதிகாரியும் பங்கேற்கக் கூடாது.
* அமைச்சர்கள் தங்களது அரசுப் பயணங்களுடன் தேர்தல் பிரச்சாரங்களை எக்காரணம் கொண்டும் இணைக்கக் கூடாது.
* மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் இப்போது தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் கீழ் இயங்குவார்கள்.
* முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அதாவது, புதிய சாலைத் திட்டங்கள், அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், குடிநீர் திட்டங்கள் அல்லது இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டங்களைச் சட்டமன்றத்தில் அறிவிக்கவோ அல்லது அதற்கான அரசாணையை வெளியிடவோ முடியாது.
* தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தொடங்கப்பட்ட பணிகளைத் தொடரலாம். ஆனால், புதிய டெண்டர்கள் விடுவதற்கு அனுமதி கிடையாது.
* இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரச்சாரங்களுக்காக அரசின் வாகனங்கள், அரசு விமானம், ஹெலிகாப்டர்கள் அல்லது அரசு அதிகாரிகளை பயன்படுத்த முடியாது.
* பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகள், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (RO) அனுமதி பெற வேண்டும். பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

