

லக்னோவைச் சேர்ந்த 27 வயதான ஷர்தேந்து திவாரி (Shardendu Tiwari), அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த கிளவுட் இன்ஜினியர் (Cloud Engineer) வேலையையும், ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தின் நல்வாய்ப்பையும் உதறிவிட்டு, தனது லட்சியத்திற்காக இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளார்.
பீகார் மாநிலம் உள்ள கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA Gaya) நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்புக்குப் பிறகு, அவர் அங்குள்ள மிக உயரிய கேடட் பதவிகளில் ஒன்றான சீனியர் அண்டர் ஆபீஸர் (Senior Under Officer - SUO) பொறுப்புக்குத் தகுதி பெற்றுத் தன் திறமையை நிரூபித்தார்.
மேலும் செப்டம்பர் 5-ம்தேதி நடைபெற்ற பாசிங் அவுட் பரேட் (Passing Out Parade) நிகழ்வுக்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் (Lieutenant) அதிகாரியாக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக நடைபெற்ற தேர்வு செயல்முறைகளில் (SSB Interview) ஷர்தேந்து திவாரி 7 முறை தோல்வியடைந்த போதிலும், தனது 8-வது முயற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் Technical Entry Scheme (Short Service Commission - Tech) மூலம் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் தனது தொழில்நுட்ப அறிவை ராணுவப் பணியோடு இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக, அமேசான் (Amazon) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் சம்பளத்தில் கிளவுட் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த அவர், அந்த ஆடம்பர வேலையையும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தில் கிடைத்த பெரும் வேலை வாய்ப்பையும் நாட்டுக்காக நிராகரித்துள்ளார்.
அவரது இந்த முடிவுக்கு அவரது குடும்பப் பின்னணியே முக்கியக் காரணமாக அமைந்தது. இவரது தந்தை ராஜ் குமார் திவாரி, இந்திய ராணுவத்தின் 'ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ்' (Army Service Corps) பிரிவில் 36 ஆண்டுகள் சேவை செய்து 'கௌரவ கேப்டனாக' (Honorary Captain) ஓய்வு பெற்றவர்.
ராணுவத்தில் பணியாற்றிய தன் தந்தையைப் பார்த்து வளர்ந்த ஷர்தேந்துவுக்கு, சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. தந்தையின் தேசப்பணியால் ஈர்க்கப்பட்டு தற்போது ஷர்தேந்தும் அதே ராணுவப் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளார்.
லக்னோவின் நீல்மதா பகுதியைச் சேர்ந்த ஷர்தேந்து, ஹரியானாவின் சண்டிமந்திரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் (PEC) தகவல் தொழில்நுட்பத்தில் (IT) பொறியியல் பட்டமும், அதைத் தொடர்ந்து கணினி அறிவியலில் எம்.டெக் (M.Tech) பட்டமும் முடித்தவர்.
ராணுவத்தின் 'தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்' (Technical Entry Scheme) மூலமாகத் தற்போது அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் வெற்றிகரமான பணியைப் பெற்றிருந்த போதிலும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது இலக்கில் அவர் உறுதியாக இருந்தார். தொழில்நுட்பத் துறையில் தனக்கிருந்த நிபுணத்துவத்தை ராணுவப் பணியுடன் இணைக்கும் வகையில், தொழில்நுட்பப் பிரிவு (technical route) வழியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவரது விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
கார்ப்பரேட் உலகின் ஆடம்பர வாழ்க்கையும், லட்சக்கணக்கான சம்பளத்தையும் விட, தாய்நாட்டிற்குச் சேவை செய்வதே முக்கியம் என்று சாதித்துக் காட்டிய ஷர்தேந்து திவாரியின் இந்த தேசப்பற்று மற்றும் விடாமுயற்சி பயணம், தற்போதைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய முன்மாதிரியாக மாறியுள்ளது.