

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் 1-ம் தேதி டெல்லிக்கு சென்றார். பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை தனிக்கட்சியைத் தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப ஜூன் 2-ம் தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக 5 பக்க கடிதத்தை வழங்கினார்.
இந்தக் கடிதத்தில், தான் தமிழக பாஜக-வில் இருந்து ஒதுக்கப்பட்டதன் பின்னணி, சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் தெரிவித்திருந்தார். அன்றைய தினமே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் அவர் சந்தித்துப் பேசினார். இதற்கிடையில் நேற்று (ஜூன் 4) பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை.
கட்சியில் அவரை தக்க வைக்க பாஜக சார்பில் பல்வேறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 5) பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலையின் முடிவை ஏற்றுக் கொண்டது தேசிய தலைமை. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, அரசியல் ஈடுபாட்டால் தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். ஆனால் இப்போது பாஜகவில் இருந்து விலகி, தனிக்கட்சியைத் தொடங்க உள்ளார் அண்ணாமலை. இந்த முடிவு அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளம் வாயிலாக பேசிய அண்ணாமலை, "கடந்த 2020 ஆகஸ்ட் 25-ல் பாஜக-வில் இணைந்தேன். 6 ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்தேன். கடந்த 2009-இல் தேமுதிக கட்சியில் 3 மாத இண்டர்ன்ஷிப் பயிற்சி செய்தேன். அதுதான் என்னுடைய முதல் அரசியல் நகர்வு. அடுத்த 10 ஆண்டுகளில் பாஜகவில் இணைந்து பணியாற்றி, பன்மடங்கு அரசியல் அரனறிவைப் பெற்றேன். பாஜகவில் இணைவதற்கு முந்தைய நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேசினேன். தற்போது என்னைப் பற்றிய பல வதந்திகள் பரவுகின்றன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது பேசுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியே என்னுடைய முக்கிய நோக்கம். தமிழர் அடையாளத்தோடு பாஜக இருந்தால் மட்டுமே வளரும் எனத் தெரிவித்தேன். ஆகையால் தான் உள்ளாட்சி மற்றும் லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தேன்.
பாஜகவில் எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை கடந்த 18 மாதங்களாகவே தெரிவித்தேன். பாஜகவில் இருந்து விலகும் முடிவை கடந்த ஆண்டே எடுத்து விட்டேன். அடுத்து வரும் தேர்தலில் நம்முடைய கட்சி நிச்சயமாக போட்டியிடும். அதற்கு நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டை நாட்டில் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய கட்சி வேண்டுமா என்றால், நிச்சயமாக வேண்டும்.
பிறந்தநாள் கொண்டாடுவதை எல்லாம் நிறுத்த வேண்டும். அதற்காக தான் நேற்று நான் எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திறன் படைத்த தலைவர்களை கொண்டு வர வேண்டும். நாம் ஒரு வித்தியாசமான கட்சியாக இருந்து, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். நிரந்தர தலைவர் என்பதை நாம் உடைக்கப் போகிறோம். எத்தனை முறை பதவி வகிக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயிக்கப்படும். புதியவர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
www.wetheleader.org என்ற இணையதளத்தில் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் இணையலாம். இணைபவர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி வழங்கப்படும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு செங்கல்லையும் எடுத்து வைக்கும் போது, அதனை நேர்மையாக எடுத்து வைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு இங்கிருந்து நல்ல தலைவர்களை அனுப்புவோம். யார் மீதும் வன்மம் கிடையாது. மாற்றத்தை கொடுக்கக் கூடியது தான் சமூக வலைதளத்தின் வேலை. சமூக வலைதளத்தில் நாம் அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இன்றிலிருந்து நாம் செல்லக் கூடிய பாதை மக்களுக்கான பாதை. வருங்காலத்தில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். பாஜகவில் சில விஷயங்களை நாம் நேரடியாக எதிர்க்க வேண்டும் என்றால், நேரடியாக எதிர்ப்போம். பாஜகவில் இருந்த போதே மும்மொழி கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்தேன்.
நாகரிகமான அரசியலை முன்னெடுப்பேன். நிச்சயமாக நாம் எல்லோரும் சேர்ந்து முன்னேறி செல்வோம். சாமானிய மக்களுக்கான அரசியலை நாம் முன்னெடுப்போம். பாரத நாட்டில் தமிழ்நாட்டை முதன்மைப்படுத்துவதே முக்கிய நோக்கம். நம்முடைய இயக்கம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.