

இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசியல், ராணுவப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகள் ரீதியான மோதல் காரணமாக அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எவ்வித உறவும் இல்லை.
இந்நிலையில் இன்று அரபிக் கடலில் இந்திய கடற்படை கப்பல் மீது, பாகிஸ்தான் போர்க் கப்பல் மோதியது. இதனைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் வழக்கமான கண்காணிப்பில் இந்திய போர்க் கப்பல் ஈடுபட்டு வந்தது. அப்போது பாதுகாப்பற்ற முறையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கப்பல் இயக்கப்பட்டது. கட்டுப்பாடற்ற முறையில் இயங்கியதால் இந்தியக் கப்பலின் மீது பயங்கரமாக மோதியது பாகிஸ்தான் கப்பல்.
சர்வதேச கடல் பகுதியில் இந்திய போர்க் கப்பல் வழக்கமான ரோந்து பணியில் இருந்தபோது, பாகிஸ்தானின் Hunain-Class ரக போர்க் கப்பல் அதிவேகமாக வந்தது. அப்போது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு விதிகளை மீறி ஆபத்தான முறையில் பாகிஸ்தான் கப்பலை திசை மாற்றியதால் இம்மோதல் ஏற்பட்டது.
இரு கப்பல்களும் ஒன்றோடொன்று உரசிக் கொண்ட இந்த சம்பவத்தில், இந்திய போர்க் கப்பலில் இருந்த வீரர்களுக்கு கடுமையான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்திய போர்க் கப்பலை கவனமுடன் இயக்கியதால், பெரிய அளவிலான கட்டமைப்பு சேதங்களும் தவிர்க்கப்பட்டன.
கடலில் நடந்த இந்த மோதலை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், நியூடெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக உயரதிகாரியை நேரில் அழைத்து கடும் கண்டனத்தையும், பலத்த எதிர்ப்பையும் பதிவு செய்தது.
சர்வதேச கடல் எல்லைகளில் போர்க் கப்பல்கள் இயங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச விதிமுறைகளை பாகிஸ்தான் கப்பல் அப்பட்டமாக மீறியிருப்பதாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியக் கப்பலை மோதுயது தொடர்பாக, பாகிஸ்தான் கடற்படையோ அல்லது வெளியுறவு அமைச்சகமோ இதுவரையிலும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இருப்பினும் இந்தியாவின் இக்குற்றச்சாட்டைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி, இந்த சம்பவம் குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்திற்குத் தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவான Inter-Services Public Relations, இதுவரை எந்தவொரு மறுப்போ அல்லது விளக்கமோ பொதுவெளியில் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. இதனால் இந்த மோதல் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட செயலா என் கேள்வி எழுந்துள்ளது.