தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடியவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் பாமக தயக்கம் காட்டி வந்த நிலையில், இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 18 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. இந்நிலையில் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சட்டமன்ற தேர்தலின் போது பாமகவுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததால், இபிஎஸ் மீது அன்புமணி அதிருப்தியில் இருக்கிறார். இந்நிலையில் பாமக தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க இபிஎஸ் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் இதுவரை இபிஎஸ்ஸை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை அன்புமணி.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக தேமுதிக பிரச்சாரம் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக கூட்டணியில் ஐயூஎம்எல், காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகள் இருக்கின்றன.
மறுபுறம் நாதக மற்றும் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பாமகவின் ஆதரவு இருந்தால் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அதிமுக தலைமை கருதுகிறது. ஆனால் இதற்கு அன்புமணி தரப்பில் இருந்து பதில் வராத நிலையில், அன்புமணியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார் இபிஎஸ்.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளித்தால், தவெக மற்றும் அதிமுக இடைய தான் கடுமையான போட்டி நிலவும் என கள நிலவரங்கள் சொல்கின்றன.
இருப்பினும் அரசியலைப் பொறுத்த வரையில் கட்சிகளின் நிலைப்பாடு அவ்வப்போது மாறக் கூடும் என்பதால், பாமக-வை இழுக்க திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.