

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்தே BLACK & WHITE கோட் சூட் உடையிலேயே தலைமை செயலகம் மற்றும் அரசு சார்ந்த அனைத்து விஷயங்களில் பங்கேற்று வருகிறார். விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட விஜய் கோட் சூட்டிலேயே வந்திருந்தார். இதற்கு ஒரு சிலர் விமர்சனம் செய்து இருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் போது விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.
ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டார்.
பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆகிவிட்டதால் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முதலில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் நேற்று திருச்சி சென்றார்.
அதன் பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருக்கு போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசினார்.
அதன்பின்னர் தனது உடை குறித்து பேசிய முதல்வர் விஜய், பின்வரும் காரணங்களை வெளிப்படுத்தினார்:
நான் கோட்-சூட் போட்டு வருவதைப் பார்த்து பேசுகிறார்கள். ஏன், நானெல்லாம் கோட்-சூட் போடக்கூடாதா? என கேள்வி எழுப்பிய அவர், ஆதிக்க சக்திகளின் ஏகபோக உடை என்ற எண்ணத்தை உடைக்கவே இந்த ஆடையை தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
அதிகாரம் செய்பவர்கள் மற்றும் ஆதிக்க சக்திகள் மட்டுமே கோட் சூட் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அனைவரும் அதை அணியலாம் என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
நான் என்ன மற்றவர்களை மாதிரி கலர் கலராவா போட்டுட்டு வர்றேன்.. ரெண்டே ரெண்டு கலர்தான். Black & White. எல்லாத்துலயும் இந்த விஜய் Black & White ஆக இருப்பான் என்பதை காட்டத்தான் இந்த கலர். கருப்பு நிற கோட் எதைக் குறிக்கிறது என்பது குறித்து விளக்கம் தேவையில்லை, அது மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என்று மறைமுக அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தினார்.
தனது அரசியல் மற்றும் சிந்தனை மக்களாகிய உங்களுடைய மனதைப் போலவே 'Black & White' ஆக நேர்மையாக இருக்கும் என்பதை காட்டவே இந்த நிறங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் வேஷ்டி-சட்டை எனும் மரபார்ந்த உடையிலிருந்து விலகி, நவீன மற்றும் அதிகாரப்பூர்வமான கோட் சூட் உடையில் விஜய் வலம் வருவது பொதுமக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.