
பட்டப்படிப்பை முடித்த இளைஞர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்வது வழக்கம். படிப்புக்கேற்ற வேலை அனைவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் புதிதாக வேலைக்குச் செல்வோருக்கு சம்பளம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் இவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY)’ என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் படி புதிதாக வேலைக்குச் செல்வோருக்கு இரண்டு தவணைகளில் தலா ரூ.15,000 வழங்கப்படும்.
இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை நிதி சிக்கலில் இருந்து விடுவிக்கவும் மத்திய அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் குறித்த தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் வகையில் நேற்று சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டத்தை மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பணியில் சேர்ந்த பின் பிஎஃப் கணக்குத் தொடங்கப்படும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதும், முதல் தவணை ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்கப்படும். பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்த பின் இரண்டாவது தவணை ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்கப்படும்.
Employment Linked Incentive (ELI) எனும் இந்தப் புதிய திட்டம், பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும். தொடக்க கால வேலை கட்டத்தில் இளைஞர்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற ஊக்குவிக்கவும் மத்திய அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.99,446 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ரூ.1 இலட்சத்திற்கும் குறைவான சம்பளத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு இத்திட்டம் ஊக்கத்தொகையை வழங்கும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க உதவும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.92 கோடி புதிய பணியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இத்திட்டம் வருகின்ற 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல் வருங்கால வைப்பு நிதியில் கணக்குக் தொடங்கப்பட்ட பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
வேலைக்குச் செல்வோருக்கு மட்டுமின்றி, வேலை வழங்கும் நிறுவனத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்படி, ரூ.10,000 சம்பளத்தில் பணியாளரை நியமித்தால் ரூ.1,000, ரூ.20,000 சம்பளத்தில் பணியாளரை நியமித்தால் ரூ.2,000, ரூ.20,000 முதல் ரூ.1 இலட்சம் வரையிலான சம்பளத்தில் பணியாளரை நியமித்தால் ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.