

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் இன்றும்(9-ம்தேதி), தமிழகத்தில் 23-ம்தேதியும் ஓரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் வரும் 23-ம்தேதி மற்றும் 29-ம்தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 4-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 234 தொகுதிகளில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 7,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 9) வெளியிடப்படுகிறது.
இந்த 5 மாநில தேர்தலை நேர்மையாகவும் அமைதியாகவும் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிர முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில், வாக்குச்சாவடிகளின் உள்ளேயும், வெளியேயும் இணைய வழி ஒளிபரப்புக்கு(வெப் காஸ்ட்) (Internet Streaming/Broadcasting) ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இணைய ஒளிபரப்பு என்பது வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு செயல்முறையை கண்காணிக்கும் தேர்தல் ஆணையத்தின் உள் ஏற்பாடாகும்.
அத்துடன் வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு வேண்டுமென்றே தடை செய்யப்பட்டால், அங்கு மறுவாக்குப்பதிவை பரிந்துரைக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அறிவுறுத்தலையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
ஏனெனில் தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களால் வாக்குச்சாவடிகளில் இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், அத்தகைய நிகழ்வுகளை கையாள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வாக்குச்சாவடியில் இணையவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதில் தீய நோக்கம் இருப்பதாக தேர்தல் அதிகாரிக்கு உறுதியாக தெரியவந்தால், ‘ஒத்தி வைப்பு தேர்தல்’ அறிவுறுத்தலின் கீழ் மறுவாக்குப்பதிவை பரிந்துரைத்து தேர்தல் ஆணையத்திடம் சூழ்நிலையை விளக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஒளிபரப்பு தகவல்களை பகிர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து வலை ஒளிபரப்பு தரவை பகிர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. ஆனால் ஐகோர்ட்டு அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே வலை ஒளிபரப்பு தரவை பகிர முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.