

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் (ஏப்ரல் 6-ந்தேதி)முடிகிறது. வேட்பு மனுவை பரிசீலனை செய்ய கடைசி நாள் நாளை (ஏப்ரல் 7-ம்தேதி) எனவும் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9-ம்தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள், வாக்காளர்களைக் கவர பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். வாக்காளர்களைக் கவர தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மறுபுறம் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தேர்தல் தொடர்பான விபரங்களை வழங்கும் முக்கியப் பணியைத் கையில் எடுத்துள்ளது. அதாவது, வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விபரங்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் ‘வாக்காளர் தகவல் சீட்டு’ (Voter Information Slip) விநியோகம் செய்யும் பணியை வரும் ஏப்ரல் 10-ம்தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது.
கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்டு வந்த புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களுக்குப் பதிலாக, இந்த முறை தேர்தல் ஆணையம், வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சீட்டுகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் நேரம் போன்ற முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விபரங்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் ‘வாக்காளர் தகவல் சீட்டு’ (Voter Information Slip) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ) மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
அனைத்து வாக்காளர்களுக்கும் ‘வாக்காளர் தகவல் சீட்டு’ விநியோகம் செய்யும் பணி வரும் ஏப்ரல் 10-ம்தேதி தொடங்கி 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் தற்போது முழுமையான தயார் நிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தெரியவருகிறது.
‘வாக்காளர் தகவல் சீட்டு’களைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளர்கள், அதனைப் பயன்படுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.