
வாகனங்கள் அதிகளவில் பெருகி விட்ட நிலையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. விபத்துகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு உதவித்தொகையை அளிக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
இதேபோல் தற்போது விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தால் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாலை விபத்தில் யாரேனும் சிக்கினால் முதலில் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதனாலேயே பலரும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத் தயங்கினர். ஆனால் விதிகளைத் தளர்த்தி விபத்தில் அடிபட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தால் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்த பிறகு, பொதுமக்கள் பலரும் தயங்காமல் உதவி செய்தனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கும் ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட கால்நடைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்போருக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசால் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் எடுத்து வருகிறது.
இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் மாடுகள் தான் சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. இதுதவிர நாய்களும் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கிக் தவிக்கின்றன. இந்நிலையில் விபத்துகளில் சிக்கும் ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட கால்நடைகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இருப்பினும் உதவித்தொகை எவ்வளவு என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதற்காக தொடர் ஆலோசனைகள் நடந்து வருகிறது. விரைவில் உதவித்தொகை எவ்வளவு என்பது அறிவிக்கப்படும்” எனக் கூறினர்.
சென்னை, சேலம் மற்றும் வேலூர், உள்ளிட்ட பெருநகரங்களில் கால்நடைகள் பலவும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. குப்பைத்தொட்டியில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கவர்களை கால்நடைகள் உண்பதால் தேவையற்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
விபத்தில் சிக்கும் கால்நடைகளைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது போல், கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்ணாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.