

வயதான காலத்தில் தனி நபரின் நிதி பாதுகாப்பிற்காக கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அடல் ஓய்வூதிய(Atal Pension Yojana Scheme) திட்டத்தை தொடங்கி வைத்தார். 60 வயதிற்கு பிறகு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும், நிதி தேவைக்காகவும், மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஏழைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்க்கத்தினர், அமைப்பு சாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், கூலித்தொழிலாளர்கள், தனியார் துறையில் பணியாற்றுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வுதிய சலுகைகளை வழங்காத நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஓய்வுக் காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம்.
இந்த திட்டத்திற்கு பீரிமியம் செலுத்தியதற்கு ஏற்ப ஒருவர் மாதந்தோறும் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 அல்லது ரூ.5000 வரை ஓய்வூதியமாக பெறலாம். இந்த திட்டத்தில் இணைந்தவருக்கு 60 வயது முதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பதால் முதலீடு சார்ந்த அபாயம் எதுவும் இருக்காது மற்றும் முதலீடு தொகைக்கு ஆண்டுதோறும் 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்பதால் இதை ஒரு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம் என்றே சொல்லலாம்.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு சந்தாதாரர் குறைந்த பட்சமாக 20 ஆண்டுகளும், அதிகபட்சமாக 42 ஆண்டுகளும் முதலீடு செய்ய வேண்டியது இருக்கும். பின்னர், அவர்கள் 60 வயதை எட்டியவுடன் மாதந்தோறும் உத்தரவாதமான ஓய்வூதியத்தை பெறத் தொடங்குவார்கள்.
உதாரணத்திற்கு கணக்கு துவங்குபவரின் வயது இப்போது 18 என்று வயது என்று வைத்துக் கொள்ளுங்கள் மாதம் ரூ.42 இத்திட்டத்தில் சேமித்து வந்தால் 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.1000 பெற முடியும். அதுவே ரூ.210 முதலீடு செய்து வந்தால் மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.5000 கிடைக்கும். இந்த சேமிப்பிற்கான மாத தவணை உங்களது வயதைப் பொறுத்து மாறும்.
எதிர்பாராத விதமாக இந்த திட்டத்தின் காப்பீட்டுத்தாரர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது மனைவி அல்லது கணவருக்கு அவர்களின் இறப்பு காலம் வரை அதே ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
இருவரும் உயிரிழக்கும் பட்சத்தில் வாரிசுதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.1.70,000 மொத்தமாக வழங்கப்படும்.
தகுதிகள் :
* இந்த திட்டத்தில் 18 வயது முதல் 49 வயது வரை உள்ளவர்கள் இந்திய குடிமக்கள் இணைந்து கொள்ளலாம்.
* தனியார் துறையில் உள்ள ஊழியர்களும், ஓய்வூதிய சலுகைகளை வழங்காத நிறுவங்களில் பணிபுரிபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
* விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டியது அவசியம்.
* விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பணியில் இருக்கக் கூடாது.
* வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது.
* முக்கியமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் மத்திய அரசின் மற்ற எந்தவொரு பென்ஷன் திட்டங்களுக்கும் விண்ணப்பித்து இருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை,
பிறப்பு சான்றிதழ்,
SSLC சான்றிதழ்,
சேமிப்புக் கணக்கு எண் (bank savings account number)
மேலும், உங்களுடைய கணவன் அல்லது மனைவி மற்றும் நாமினியின் ஆதார் எண்ணையும் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிமுறை :
நீங்கள் மாதந்தோறும் சந்தா செலுத்தும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில், அதை 6 மாதங்களுக்கு கட்டாமல் விட்டுவிட்டால், உங்களுடைய APY அக்கவுண்ட் முடக்கப்படும்.
அதுவே, 12 மாதங்களுக்கு கட்டத் தவறினால், அக்கவுண்ட் செயலிழந்து விடும். அதேபோல், 24 மாதங்களுக்கு, அதாவது 2 வருடங்களுக்கு செலுத்தவில்லை என்றால், அக்கவுண்ட் தானாகவே மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தாமதமாக பணம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
அதேபோல் நீங்கள் 60 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாகவே, இறப்பு அல்லது உடல்நலக் கோளாறால் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறினால், நீங்கள் கட்டிய தொகையும், அதற்கான வட்டியும் மட்டுமே வழங்கப்படும் தவிர, நீங்கள் செலுத்திய தொகைக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட எந்த பணமும் அதற்கான வட்டியும் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
அடல் பென்ஷன் யோஜனா அக்கவுண்ட் திறப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் அக்கவுண்ட்டை திறக்க நீங்கள் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு சென்று, APY பதிவு படிவத்தை வாங்கி அதில் உங்களுடைய பிறந்த தேதி, பெயர், ஆதார் எண், மொபைல் நம்பர், முகவரி போன்ற அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து, உங்களுடைய சந்தா தொகை மற்றும் வயதின் அடிப்படையில் மாதாந்திர பென்ஷன் தொகையை தேர்ந்தெடுத்து, அதை வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு, உங்களது வங்கி சேமிப்பு அக்கவுண்ட்டில் இருந்து சந்தா தொகை ஆட்டோ டெபிட் ஆவதற்கான செயல்முறையை முடித்துவிட்டு, உங்களுக்கு APY அக்கவுண்ட் நம்பர் ஒன்றை வழங்குவார். அவ்வளவு தான் உங்களுக்கான அடல் பென்ஷன் யோஜனா அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டது.
அதன் பின்னர் உங்களது சேமிப்பு கணக்கில் இருந்து மாதந்தோறும் தேர்வு செய்த சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். இதற்காக ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்.
இந்த திட்டத்தின் சூப்பரான அம்சம் என்னவென்றால், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் சந்தாவை செலுத்திக் கொள்ளலாம். இது மாதந்தோறும் சந்தா செலுத்த முடியாதவர்களுக்கு சிறந்த வழி. மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சிசிடி (1பி) இன் கீழ் ரூ.50,000 வரை விலக்கு உண்டு.
- உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று தான்.