

2026-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகின்ற மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே ஏப்ரல் 26-ம் தேதி மாலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.
நீட் தேர்வுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான நீட் தேர்வு வினாத்தாள் பகிரப்பட்டு வரும் நிலையில், இதனை மாணவர்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை (NTA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
MBBS மற்றும் BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போலி வினாத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களை கொடுப்பதாக கூறி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பெற்றோர்களும், மாணவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுரைத்துள்ளது.
முன்னரே கசிந்த வினாத்தாள் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நீட் தேர்வு வினாத்தாள் முற்றிலும் பொய்யானது. இதனை நம்பி மாணவர்கள் யாரும் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கையாளப்பட்டு வருகின்றன. ஆகையால் வினாத்தாள்கள் பொதுவெளி மற்றும் சமூக வலைதளங்களில் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் அதிகாரவபூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தை மட்டுமே மாணவர்கள் பார்க்க வேண்டும்.
யாரேனும் உங்களுக்கு நீட் தேர்வு வினாத்தாளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தாலோ அல்லது போலி சமூக வலைதள கணக்குகளை நீங்கள் கண்டறிந்தாலோ உடனடியாக தேசிய தேர்வு முகமையிடம் அதுகுறித்த தகவல்களை புகாராக பதிவு செய்யுங்கள்.
தேர்வு நேரத்தில் இது போன்ற வதந்திகள், பல மாதங்களாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் மன உறுதியை சீர்குலைக்கக் கூடும் என்பதால், மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.