

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டிய தொற்று அபாயம் இந்தியாவில் பரவக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது வரை 34,600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் உள்ள 64 மாவட்டங்களில், சுமார் 58 மாவட்டங்களில் தட்டம்மை நோய் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பதால், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் அண்டை நாடுகளை எச்சரித்துள்ளன.
இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத்தில் தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதிப்பு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 1 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி விகிதம் குறைந்ததே தட்டம்மை நோய் பரவலுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் எல்லை தாண்டிய தொற்று அபாயமாக, தட்டம்மை நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்தியா முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய் காற்றில் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால், தடுப்பூசி போடாத ஒரு நபருக்கு 90% இந்த நோய்த் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா மற்றும் வங்கதேச ஆகிய நாடுகளுக்கு இடையில் அதிக போக்குவரத்து இருப்பதால் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. தட்டம்மை நோய் பரவாமல் இருக்க இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அறிகுறிகள்:
உங்கள் குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல், கண்கள் சிவத்தல், இருமல் மற்றும் உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
தடுப்பூசி:
தட்டம்மை நோய் வருவதற்கும் முன்னே அதனை தடுப்பதற்கு ஒரே வழி, எம்எம்ஆர் (MMR) தடுப்பூசி தான். உங்கள் குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை தட்டம்மை பாதிப்பு இருப்பது உறுதியானால் உங்கள் குழந்தைகளை தனிமைப்படுத்தி வைப்பது நோய்ப் பரவலைத் தடுக்க உதவும்