

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சீர்படுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது பரிசீலனையில் உள்ள இந்தத் திட்டம் மார்ச் மாதம் முடிவதற்குள் இறுதி செய்யப்பட்டு, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என ஒரு சமநிலையான சமூகத்திற்கு பிறப்பு விகிதம் குறைந்தபட்சம் 2.1 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆந்திர மாநிலத்தில் தற்போது பிறப்பு விகிதம் 1.5 ஆக குறைந்துள்ளது.
இந்த பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆந்திர பிரதேச மாநிலம் இருக்கிறது. இல்லையென்றால் வருகின்ற 2047 ஆம் ஆண்டுக்குள் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை 23% அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது சமநிலையான சமூகத்தை பாதிக்கும்.
ஆந்திராவில் சமநிலையான சமூகத்தை உருவாக்க பிறப்பு விகிதம் கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இந்நிலையில் 2வது அல்லது அதற்கு மேல் குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறக்கும் போது ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
* மூன்றாவது குழந்தைக்கு மட்டும் ஊட்டச்சத்து உதவியாக 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
* மூன்றாவது குழந்தையின் 18 வயது வரை இலவச கல்வி வழங்கப்படும்.
* பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்த பரிசீலனை செய்யப்படும்.
* பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ள 2 மாதங்கள் வரை விடுப்பு வழங்கப்படும்.
ஆந்திர பிரதேசத்தில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த, ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’ மூலம் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
தற்போது ஆந்திர சட்டசபையில் இதற்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அரசாணை (GO) வெளியான பிறகு தான், இதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். இதற்கென பிரத்யேகமாக 'Prajala Palana' என்ற போர்ட்டல் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.