ஒரு வங்கி, தனது வாடிக்கையாளரின் முகவராகச் செயல்படும்போது, காசோலைகளை அவற்றின் செல்லுபடியாகும் காலத்திற்குள் வசூலுக்காகச் சமர்ப்பிப்பதில் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறுவதால், போதிய நியாயமான விளக்கம் ஏதுமின்றி அந்தக் காசோலை செல்லாததாகிப் போகுமேயானால், அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் "சேவைக் குறைபாடு" (deficiency in service) எனக் கருதப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களான கவிதா சௌத்ரி மற்றும் பிரியா சௌத்ரி ஆகியோர், கனரா வங்கியில் சேமிப்புக் கணக்குகளை வைத்திருந்தனர். கடந்த 2018ம் ஆண்டு மே 29-ம்தேதி, அசோடெக் லிமிடெட் (Assotech Limited) நிறுவனத்தால் வழங்கப்பட்டு, விஜயா வங்கியின் (Vijaya Bank) பெயரில் எழுதப்பட்ட, மொத்தம் ரூ.1,06,10,768 மதிப்புள்ள இரண்டு காசோலைகளை கவிதா, பிரியா என்ற இருவரும் தங்களுடைய கனரா வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தனர்.
2018-ம் ஆண்டு ஜூன் 1 அன்று வங்கி அத்தொகைகளை வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைத்தது; ஆனால் அதே நாளில், ‘ஆன்லைன் காசோலைத் திருப்பம்’ (online cheque return) என்ற குறிப்புடன் அத்தொகைகளை மீண்டும் கணக்கிலிருந்து பற்று வைத்து (debit) திரும்பப் பெற்றது.
அதனை தொடர்ந்து "வங்கி வேலைநிறுத்தம்" காரணமாகவே அந்தக் காசோலைகள் திருப்பி அனுப்பப்பட்டன என்பது பின்னர் தெரியவந்தது. வங்கி இறுதியாக ஜூன் 5 மற்றும் 11, ஆகிய தேதிகளில் அந்தக் காசோலைகளை மீண்டும் சமர்ப்பித்தபோது, ஜூன் 2, 2018 அன்றே அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்திருந்ததால், "காசோலை காலாவதியாகிவிட்டது/செல்லாததாகிவிட்டது" (instrument out dated/stale) என்ற குறிப்புடன் அவை திருப்பி அனுப்பப்பட்டன. அதாவது வங்கியின் அலட்சியத்தால் அந்த காசோலைகள் காலாவதியாகின.
இதைத்தொடர்ந்து தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் (NCDRC) இருவரும் கனரா வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். கனரா வங்கி, 1881-ம் ஆண்டின் மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் (NI Act) பிரிவு 75A-இன் கீழ், தாமதத்திற்கான காரணம் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையாக (வேலைநிறுத்தம்) இருந்ததால், அந்தத் தாமதம் மன்னிக்கத்தக்கது என்று வங்கி வாதிட்டது.
மே 29 அன்று வங்கி காசோலை விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்ததாகவும், வேலைநிறுத்தம் முடிந்த உடனேயே அவற்றை மறுசமர்ப்பித்திருக்க வேண்டும் என்றும் எதிர்வாதிகள் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் , வசூலுக்காக காசோலைகளை பெறும் ஒரு வங்கி, வாடிக்கையாளரின் முகவராக செயல்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலாவதி காலத்திற்குள் அந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டிய கடமை வங்கிக்கு உள்ளது.
மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற்றிருந்தாலும், ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் வங்கி செயல்பட்டது என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த வேலை நாட்களில் காசோலைகள் காலாவதியாவதற்கு முன்பாக, ஏன் அவை மறுசமர்ப்பிக்கப்படவில்லை என்பதற்கு வங்கியால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை. "தொழில்நுட்பக் கோளாறு" (technical failure) என்று வங்கி தரப்பில் வாய்மொழியாக வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது; ஏனெனில், வங்கியின் அசல் மனுவில் (pleadings) அந்த வாதம் இடம்பெறவில்லை.
இறுதியில் தீர்ப்பாயம் காசோலை மதிப்பில் 10 சதவீதம் அபராதத்தை 8 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கனரா வங்கி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் பூயன் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அதில் நீதிபதிகள் கூறுகையில், வசூலுக்காக காசோலைகளை பெறும் ஒரு வங்கி, வாடிக்கையாளரின் முகவராக செயல்படுகிறது. காசோலைக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் காலத்திற்குள் பரிவர்த்தனை செய்வதில் உரிய கவனத்தை செலுத்த வேண்டிய கடமைக்கு உட்பட்டது.
அவ்வாறு செய்யத்தவறி, காலாவதியாகிவிட்டால், அதற்கு நியாயமான விளக்கம் எதுவும் இல்லாதபட்சத்தில் அது வங்கி கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக கருதப்படும். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி சேவை குறைபாடாக (deficiency in service)அமையும் என தெரிவித்தார்.
எனவே NCDRC (தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்) வழங்கிய "சேவைக் குறைபாடு" குறித்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இருப்பினும், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) வழங்கிய இழப்பீட்டுத் தொகையை, காசோலை மதிப்பில் 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து, புகார்கள் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து, ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் வழக்கு செலவுக்கான நுகர்வோர் தீர்ப்பாயம் மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட ரூ.50 ஆயிரத்தையும் உறுதி செய்தனர்.