

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமருடனான அந்த உரையாடலின்போது, தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அரங்கில் இருந்த அனைவரும் உரக்கச் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றது. இதில் இந்தியா மொத்தம் 39 பதக்கங்களை (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்) வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. நிறைவு விழாவில் அடுத்த போட்டிக்கான கொடி இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
இதில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்து பாராட்டினார். அப்போது அவரிடம், காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றவரான நரேந்தர் பெர்வால் உரையாடினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக அரசியல் சார்ந்த பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமரிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசயம் ஒன்றை நரேந்தர் பெர்வால் நினைவுகூர்ந்து பேசினார். அவர் பேசும்போது, பாகிஸ்தானை பற்றி நாம் பேசி கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.
2015-ம் ஆண்டு உலக ராணுவ போட்டிகள் நடந்தன. என்னுடைய முதல் போட்டி பாகிஸ்தானிய குத்துச்சண்டை வீரருக்கு எதிராக இருந்தது. ராணுவ விளையாட்டுப் போட்டி என்பதாலும், இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பதற்றம் இருந்ததாலும், 'எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானிடம் தோற்றுவிடக் கூடாது' என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெர்வாலுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
கடுமையான அந்தப் போட்டியில் 4-1, 3-2 என அடுத்தடுத்து, 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்றேன்.
இருப்பினும், போட்டியில் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால், தையல் போடுவதற்காக இருவரும் ஒன்றாக மருத்துவமனைக்குச் சென்றனர்.
2014-ம் ஆண்டு முதன்முறையாக நீங்கள் பிரதமர் ஆனீர்கள். எங்களுடைய ராணுவ பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா. இதனை ஒரு நிமிடம் நினைத்து பார்த்து விட்டு, அந்த பாகிஸ்தானிய குத்துச்சண்டை வீரர் என்னை பார்த்து, சகோதரா, நான் ஒன்று சொல்லட்டுமா? என்றார். நானோ, 'சொல்லுங்கள்' என்றேன்.
அதற்கு அந்த பாகிஸ்தான் வீரர், 'உன் பெயர் நரேந்தர், உனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா... உங்கள் நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திர மோடி... இப்போது எனக்கு 'நரேந்திர' என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது' என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை நரேந்தர் பெர்வால் பிரதமர் மோடியிடம் விவரித்தபோதுதான், பிரதமர் மோடியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உரக்கச் சிரித்திருக்கிறார்.
இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரியாக இருக்கும் நரேந்தர் பெர்வால், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 90+ கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அடுத்ததாக 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத் நடத்த உள்ளது.