

கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சாதாரண மக்களுக்கு தங்கம் மட்டுமின்றி வெள்ளியும் எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வெள்ளியின் விலையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு ஒரு கிலோ 80,000 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ ரூ.2,74,000 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும், பணவீக்கத்தை எதிர்கொள்ளவும் டன் கணக்கிலான தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி வருகிறது. இந்நிலையில் டன் கணக்கிலான வெள்ளியையும் இந்தியா வாங்கி வருவது பொருளாதாரச் சந்தையில் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் வெள்ளியை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என Global Deaf Research Institute (GDRI) ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ.82,800 கோடிக்கு வெள்ளியை வாங்கியுள்ளது. உலக அளவில் கடந்த ஆண்டு வெள்ளியை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இது 2024 ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது இந்தியா வாங்கியுள்ள வெள்ளியின் மதிப்பு 44% அதிகம் என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தினால் மட்டும் வெள்ளியின் விலை உயரவில்லை. தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களில் வெள்ளிக்கு அதிக தேவை இருப்பதால், தொடர்ந்து வெள்ளி விலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச அளவில் வெள்ளி சுத்திகரிப்பில் சீனா தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வெள்ளி ஏற்றுமதிக்கு உரிமம் அடிப்படையிலான சில புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளதால், பொருளாதாரச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சந்தையில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கான சுரங்க உற்பத்தி மந்தமாகவே உள்ளது.
இதன் காரணமாக ஆண்டுதோறும் 20 முதல் 25 கோடி அவுன்ஸ் வெள்ளி பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒரு அவுன்ஸ் என்பது 28.35 கிராம்.
வெள்ளியின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும், 2026-இல் பலமடங்கு உயரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 2026 இல் மிகச்சிறந்த முதலீடாக வெள்ளி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியில் முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில், அதன் விலை மேலும் அதிகரிப்பது உறுதி.
உள்நாட்டிலேயே வெள்ளி சுரங்கத் திறனை ஊக்குவித்தல், வெள்ளி மறுசுழற்சி மற்றும் வெளிநாட்டு சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் வெள்ளி இறக்குமதியை இந்தியாவால் குறைக்க முடியும்.
வெள்ளியை விலை உயர்ந்த ஆபரணமாக மட்டும் பார்க்காமல், எரிசக்தி மாற்றத்துக்கான உலோகமாகவும் மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
இந்தியா வெள்ளியை வாங்குவதற்கான காரணங்கள்:
சோலார் பேனல்கள் தயாரிப்பில் வெள்ளி மிக முக்கியமான மூலப்பொருள். பசுமை ஆற்றலில் இந்தியா 2030-க்குள் முன்னணி நாடாக மாற திட்டமிட்டுள்ளது. இதற்கு சோலார் பேனல்கள் அதிகளவில் தேவை என்பதால், வெள்ளியை இந்தியா வாங்குகிறது.
மொபைல்போன், கம்ப்யூட்டர், 5ஜி சாதனங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாக இருப்பதாலும், இந்தியா வெள்ளியை அதிக அளவில் வாங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் வெள்ளி உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.