

பத்தாவது உலக கோப்பை டி20 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய டி20 அணியில் அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா, கடந்த சில மாதங்களாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுப்பதால், பின் வரிசை வீரர்கள் அழுத்தமின்றி விளையாடுகின்றனர்.
இந்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆகையால் நாளை பிப்ரவரி 12ஆம் தேதி நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை நமீபியா உடன் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடி வரும் சூழலில், இந்தப் போட்டி உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று அறிவித்த பாகிஸ்தான், ஐசிசியின் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் வயிற்று வலி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை.
நாளை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வேளையில், அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலம் சரியாகாமல் போனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சம்சனே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார்.
தற்போது அசாத்திய பார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா, உலகக்கோப்பை போட்டிகளை தவற விடுவது, இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது இடத்தை சஞ்சு சாம்சன் கச்சிதமாக நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பே அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. முதல் போட்டிக்குப் பிறகு, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என முன்னாள் இந்திய சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை மிகப்பெரிய போட்டியாக பார்க்காமல் மிகவும் சாதாரண போட்டியாகவே பார்க்க போகிறோம் என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.
அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா மீண்டும் பாகிஸ்தான அணியை வெல்லுமா மற்றும் அபிஷேக் சர்மா இந்த போட்டியில் பங்கேற்பாரா என்பது தான் தற்போது கிரிக்கெட் உலகத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.