

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவித்து வருகிறது. அதற்கேற்ப எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் மற்றும் குறைவான வரி போன்ற பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் பழுதடைந்தால் அதனை சர்வீஸ் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் வீட்டிற்கே சென்று சர்வீஸ் வழங்க மஹிந்திரா நிறுவனம் இ-வேன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி இருக்கும் இடத்திலிருந்தே சர்வீஸைப் பெற முடியும்.
எலக்ட்ரிக் கார் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பணிகளை வீட்டிற்கே சென்று மேற்கொள்ள பிரத்யேக எலக்ட்ரிக் வேன்களை களமிறக்கியுள்ளது மஹிந்திரா நிறுவனம். தற்போது டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, கூடிய விரைவில் நாட்டின் அனைத்து முக்கியமான நகரங்களிலும் விரிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன சந்தையில் இந்தியா தற்போது வேகமான முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் புது மாடல்களில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் செலவு குறையும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
மின்சார வாகனங்கள் அறிமுகத்திற்கு வந்த சில மாதங்களில் எதிர்மறையான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அதில் இருக்கும் குறைகளை எல்லாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் சரி செய்து, தற்போது தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வகையில் தற்போது மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் மஹிந்திரா, தனது வாடிக்கையாளர்களுக்கு கார் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பணிகளை மேலும் எளிதாக்கியுள்ளது.
இதன்படி மின்சார வாகனங்களை வீட்டிற்கே சென்று சர்வீஸ் செய்வதற்கு, மின்சார வேன்கள் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
மஹிந்திரா மின்சார SUV உரிமையாளர்களின் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கழுவுதல் மற்றும் வீட்டு வாசலில் சிறிய சர்வீஸ்களை ஆதரித்தல் போன்ற சேவைகளை இந்த இ-வேன் வழங்கும்.
இ-வேனில் சார்ஜருடன் கூடிய பேட்டரி பேக், ஹைட்ராலிக் கத்தரிக்கோல் லிஃப்ட், வீல் பேலன்சர் மற்றும் கார் பராமரிப்பு சேவைகள் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன.
வரும் நாட்களில் இ-வேன்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நாட்டின் பல முக்கிய நகரங்களில் சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் இந்த புதிய சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மஹிந்திராவின் வாகன விற்பனையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.