

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார். பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பல்வேறு காலகட்டங்களில் 3 முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து விலக நேரிட்டது. அதன் பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அரசியலில் தனித்தே இருந்தார்.
தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், ஓபிஎஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைவாரா அல்லது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிப்பாரா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.
மேலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் அவருடைய ஆதரவாளரான எம்எல்ஏ அய்யப்பன் உள்பட பலரும் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ் வருகை உறுதியானதும், அண்ணா அறிவாலயத்தில் அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டனர். இதற்கு முன்னதாக அமைச்சர் சேகர்பாபு, ஓபிஎஸ்-ஐ சந்தித்துப் பேசியுள்ளார். பிறகு இவர்கள் இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயம் வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தை பிறந்தால் வழி பிறக்கும்; தை மாதத்திற்கு பிறகு கூட்டணி முடிவை அறிவிப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் இணைய அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதால், தவெக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்வதற்கு முன்பாக, அவரை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்து இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் உட்பட சிலர் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா தனிக்கட்சி ஆரம்பித்து இருப்பதும், தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதும் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.