

ஆதார் கார்டில் முகவரி உள்ளிட்ட திருத்தங்களை இலவசமாக மேற்கொள்ள வருகின்ற ஜூன் 14-ம் தேதியே கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் இந்த வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI).
இதன்படி ஜூன் 14, 2027 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதன்மூலம் ஆன்லைன் வழியாக ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த திருத்தங்களை ஆன்லைன் வழியாக மேற்கொண்டால் மட்டுமே இலவசம். மாறாக இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சென்டர்களில் செய்தால், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
யாரெல்லாம் புதுப்பிக்க வேண்டும்?
பொதுவாக ஆதார் கார்டு எடுத்து 10 வருடங்கள் ஆகியிருந்தால், அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் வேலை மற்றும் திருமணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக முகவரி மாற்றம் செய்தவர்களும் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்.
நாட்டின் முக்கிய அரசு ஆவணமாக திகழும் ஆதார் கார்டின் துல்லிய தன்மையை மேம்படுத்தவும், போலியான ஆவணங்களைத் தவிர்க்கவும் ஆதார் கார்டு புதுப்பிப்பு அவசியமான ஒன்றாகும்.
ஆன்லைனில் ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் வழிமுறை:
1. முதலில் ஆதார் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் https://myaadhaar.uidai.gov.in/ செல்லவும்.
2. உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டதும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி-யை உள்ளிட்டு உள்நுழையவும்.
3. அடுத்ததாக Document Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.
4. அடையாளச் சான்றுக்கு வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. முகவரி சான்றுக்கு கேஸ் பில், ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யவும்.
6. நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள் pdf, jpeg அல்லது png வடிவில் 2MB-க்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
7. ஆவணங்களை பதிவேற்றம் செய்தவுடன், சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் திரையில் தோன்றும். இந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது உங்களுடைய விண்ணப்ப நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தனது பழைய mAadhaar செயலியை நிறுத்தி விட்டு, தற்போது மேம்படுத்தப்பட்ட நவீன 'Aadhaar App’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் செயலி வாயிலாகவும், ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு வருட காலம் நேரம் இருக்கிறதே என காத்திருக்காமல், ஆதார் விவரங்களை புதுப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்வது நல்லது.