

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் முதல்வரின் உத்தரவுகள் அதிரடியாக அமைந்துள்ளன. ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘சிங்கப்பெண் அதிரடி படை’ திட்டத்தை நேரடியாக கண்காணித்து வருகிறார் முதல்வர்.
இந்நிலையில் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. மேலும் இனி எந்த ஒரு போக்சோ வழக்கும் 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது. அதற்குள் முழு விசாரணையும் முடிந்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் கொலை வழக்குகள் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)’ சட்டப் பிரிவுகளின் படி, ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் புகார் மீதான விசாரணையை காவல்துறையினர் முடிக்க வேண்டும்.
60 நாட்களுக்குள் காவல் துறையினர் தகுந்த ஆதாரங்களுடன் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் போனால், குற்றவாளிகள் எளிதாக பெயில் பெற்று வெளியில் வந்து விடுவர். இதனைத் தடுக்கவே தற்போது சென்னை காவல் ஆணையர் அபிஷ் தினேஷ் மொடக் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர், காவல் நிலையத்தில் அவமதிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், இனி நாடு முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும்போது பொதுமக்கள் யாரும் அவமதிக்கப்படக் கூடாது; பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். ‘அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21’ இன் படி, இது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
இந்நிலையில் தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை மரியாதைகளுடன் நடத்த வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.