

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டார்.
இதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தன.
இதில் மிகவும் குறிப்பிடப்படும் விதியாக ரூ.50,000-க்கும் மேல் யாரேனும் பணத்தை எடுத்துச் சென்றால், அதற்கு உரிய ஆவணத்தை காட்ட வேண்டியது அவசியம். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரம் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது மக்களுக்கு இது அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு புகார்களும் எழுந்தன. இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் மருத்துவ காரணத்திற்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் வழியாகவும் காட்டலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மருத்துவ செலவுகளுக்காகப் பணம் கொண்டு செல்பவர்கள், அதற்கான ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை அசல் ஆவணங்கள் இல்லையென்றால், மருத்துவமனை ரசீதுகள் அல்லது மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை வாட்ஸ்அப் மூலம் காட்டி உறுதிப்படுத்தலாம்.
ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். ரொக்கப் பணம் மட்டுமல்லாது, கூகுள் பே மற்றும் போன்பே போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
அதிகளவிலான பணப் பரிமாற்றங்கள் அல்லது சந்தேகத்திற்குரிய UPI பரிவர்த்தனைகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் தொழில் நிமித்தமாகப் பணம் கொண்டு சென்றால், வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது கொள்முதல் ரசீதுகளைக் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.