தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் தவெக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது முதற்கட்டமாக 113-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை நாளை மறுதினம் மார்ச் 27ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் விழாவில் விஜய் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி சேராத நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை தனித்தே எதிர்கொள்ள தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக தவெக உருவெடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் வருகின்ற மார்ச் 30ம் தேதி தொடங்க இருக்கும் சூழலில், அதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிமுகப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதன்படி வருகின்ற மார்ச் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.
இந்த விழா மேடையில் தொகுதியின் பெயர் மற்றும் வேட்பாளரின் பெயரை அழைத்து தலைவர் விஜய் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இதுவரை 234 தொகுதிகளுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வகையில் தற்போது இரண்டாவதாக தமிழக வெற்றிக் கழகம் முதற்கட்டமாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்துள்ள நிலையில், இன்னும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜய் வேட்பாளர்களை அறிவிக்க இருப்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இதற்கான விடை மாமல்லபுரத்தில் நடக்கும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.
தவெக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் முக்கிய நிர்வாகிகளுக்கு அடுத்து, சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.