

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளன. இந்நிலையில் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசியல் தலைவர்களின் படங்களை தவறாக சித்தரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் களத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்களின் உருவங்களைச் சிதைப்பதோ அல்லது அவர்கள் பேசாத விஷயங்களைப் பேசுவது போன்ற 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்களை உருவாக்குவதோ தவறான செயல் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்தத் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தற்போது தேர்தல் ஆணையமும் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்தது. இதன்படி ஏஐ தொழில்நுட்பத்தில் தலைவர்களின் படங்களை தவறாக சித்தரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பல்வேறு முக்கிய காலகட்டங்களில் இந்த விதிமுறையை தேர்தல் ஆணையம் அவ்வப்போது அமலுக்கு கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு, மீண்டும் ஒருமுறை இந்த வழிகாட்டுதல்களைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்கள், ஆடியோ அல்லது வீடியோக்கள் என எதுவாக இருந்தாலும், அதில் ‘AI-Generated’ அல்லது ‘Synthetic Content’ என்ற லேபிளைத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியின் பக்கங்களில் ஏதேனும் தவறான ஏஐ படங்கள் அல்லது வீடியோக்கள் கண்டறியப்பட்டால், அவை குறித்து புகார் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்களின் குரலையோ அல்லது தோற்றத்தையோ மாற்றி, வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் தவறான ஏஐ வீடியோக்களை சித்தரிக்கக் கூடாது. இது தேர்தல் நடத்தை விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியைப் பற்றி அவதூறான தகவல்களைப் பரப்புவது, தேர்தலின் நேர்மையைச் சிதைக்கும் செயல் என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த விதிகளை மீறும் கட்சிகள் அல்லது நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (IT Act) மற்றும் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.