

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருவது ஆய்வறிக்கையில் தெரிவந்துள்ளது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில், குழந்தை பிறப்பு விகிதம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் குழந்தை பிறப்பு என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே இருந்தது. அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு கர்ப்பம், இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது சாதாரணமாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைமை முற்றிலுமாக மாறி உள்ளது. பெண்களின் கல்வி உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
திருமண வயது உயர்ந்ததால் குழந்தை பெற்று கொள்ளும் காலமும் தள்ளிப்போவதுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வமும் தற்போது தம்பதிகள் இடையே குறைந்து வருகிறது. குழந்தை வளர்ப்பில் தற்போதைய வாழ்க்கை சூழல், கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கை தரம் ஆகியவற்றிற்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக அப்போதிருந்த மூன்று குழந்தை பெற்று கொள்ளும் நிலை மாறி, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை மாறியது. ஆனால் தற்போது அந்த நிலையும் மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நிலை நவீன கால பெற்றோரிடம் வலுப்பெற்றுள்ளது.
தற்போது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் நிலையில் இரு குழந்தைகள் இருந்தால் அவற்றை சரியாக வளர்க்க முடியாது என்பதாலும் இரு குழந்தைகளுக்கும் அவர்களின் தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தால் ஒரு குழந்தை இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் குடும்ப நலதிட்டங்கள், கருத்தடை வசதிகள், மகப்பேறு விழிப்புணர்வு சேவைகள் தமிழகத்தில் முன்பே தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. நகரமயமாக்கல், கல்வி, போட்டி, வேலை வாய்ப்பு அழுத்தம், வாழ்க்கை முறை, பெற்றோர் இருவரும் வேலைக்கு போவது ஆகியவை பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருப்பதும் பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2,591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதுவே இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 13-ம்தேதி பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக உள்ளது. அதன்படி சரசரியாக ஒரு நாளைக்கு 2,138 குழந்தைகள் பிறந்துள்ளன.
அந்த வகையில் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 9,39,788 குழந்தைகளும், 2021-ம் ஆண்டில் 9,12,875 குழந்தைகளும், 2022-ம் ஆண்டில் 9,36,361, குழந்தைககளும், 2023-ம் ஆண்டில் 9,02,329 குழந்தைகளும் பிறந்துள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் கடந்த ஆண்டுகளை விட குறைவாக 8,47,715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67,715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவுவாகும்.
தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதுடன், வேலைவாய்ப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மக்கள் தொகை அமைப்பு போன்ற துறைகளில் புதிய சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.