

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே விடைத்தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கவுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே விடைத்தாள்களை திருத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திட்டமிட்டபடி மே 20-ல் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை 6 நாட்களில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
இந்தாண்டு தேர்வெழுத வேண்டிய 8 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களில், 6.24% பேர் தேர்விற்கு வரவில்லை எனத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதாவது 55,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
ஏற்கனவே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே வெளியிடலாமா என பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.