

மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948 இன் படி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும், தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கும் சில கடமைகளும், விதிகளை மீறினால் தண்டனைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பில், அதிகாரிகள் தவறாக கேள்வி கேட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதற்கட்டப் பணிகளுடன் தொடங்க உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய அரசாணையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது மத்திய அரசு.
இந்தியாவில் 1881 இல் தான் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போதும் இரண்டு கட்டங்களாக நடைபெறுது வழக்கம். முதல் கட்டத்தில் வீடுகளை கணக்கிடும் பணியும், இரண்டாவது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்விகளைக் கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இருக்கும் ஒரு அதிகாரி, வேண்டுமென்றே தவறான அல்லது தவறாக வழிநடத்தும் கேள்விகளைக் கேட்டால், அவர்களுக்குத் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுண்டு. தற்போதைய சட்ட விதிகளின்படி, இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களை பொதுமக்கள் அளித்தால் அல்லது தகவல் அளிக்க மறுத்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.
டிஜிட்டல் முறைகள் மற்றும் மொபைல் செயலிகள் மூலமாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. பொதுமக்களே தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது.