

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான போர் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், எல்பிஜி கேஸ் விநியோகம் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அவ்வகையில் தற்போது 5 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரை வாங்குவதற்கு முகவரி சான்று தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவையின்றி கேஸ் முன்பதிவு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் காரணமாக அவ்வழியே வரவேண்டிய எல்பிஜி கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்படாமல் இருக்க, நகர்புறங்களில் கேஸ் முன்பதிவு செய்ய 25 நாட்களாகவும், கிராமங்களில் 45 நாட்களாகவும் உயர்த்தப்பட்டது. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் 5 கிலோ கேஸ் சிலிண்டரை வாங்குவதற்கு இனி முகவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு முகவரி சான்று இல்லாமல் ஐடி கார்டை வைத்தே கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்ய புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்நிலையில் இனி ஐந்து கிலோ சிலிண்டர் வாங்க முகவரி சான்று தேவையில்லை என்பதால், இது பெரும்பாலான வெளி மாநிலத்தவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது