

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுகிறார். அவர் இன்று மதுரை மத்திய தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்ட போது, அதில் அவரது மனைவியான குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளியும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார் சுந்தர்.சி. மதுரை மத்திய தொகுதியின் தற்போதைய அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சுந்தர்.சி வேட்புமனுத் தாக்கல் செய்த போது, அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்தார். அதில் அவருடைய மனைவி குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளியும் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுந்தர்.சி-யிடம் 3 கார்களும், குஷ்புவிடம் 1 காரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுந்தர்.சி பெயரில் ரூ.2.97 கோடி அசையும் சொத்துக்களும் மற்றும் ரூ.17.7 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன. குஷ்பு பெயரில் ரூ.6 கோடி அசையும் சொத்துக்களும் மற்றும் ரூ.4.17 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.