

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த சனிக்கிழமை அன்று பொன்னேரி மற்றும் துறையூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக, பாஜகவின் பிடியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக எந்தக் கட்சிக்கும் அடிமை கிடையாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “எந்தக் காலத்திலும் எங்கள் கட்சி யாருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது. யாரும் எங்களை விலைக்கு வாங்கவும் முடியாது. தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பலத்துடன் அதிமுக தனித்தே இயங்கி வருகிறது” என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார் இபிஎஸ்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடையவுள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவினாலும் கூட, திமுக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு இடையில் தான் கடுமையான போட்டி நிலவும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக-வால் என்டிஏ கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அக்கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.