

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக கூட்டணி பலமாக தயாராகி வருகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி தரப்பு பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கூட்டணிகள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திமுகவில் இணைந்து விட்டது.
இதன் காரணமாக அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை அமமுக கேட்க இருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக கூட்டணியில் நேற்று தேமுதிக இணைந்ததை அடுத்து, அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்க இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் இப்போதே அதிக தொகுதிகளை கேட்க அமமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பாஜக அதிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், தற்போது அமமுக-வும் அதிக தொகுதிகளை கேட்க இருப்பதால் அதிமுக தனித்து நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் தொகுதி பஙகீடு தொடர்பான தகவல்கள் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள சூழலில், அமமுக-வின் இந்த அறிவிப்பு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை இல்லாத வகையில் தேமுதிக, திமுக-வுடன் கூட்டணி வைத்திருப்பதால், அதிமுக-வில் பிரச்சினைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் பதிலுரையை புறக்கணித்து, அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் இனறு சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, பட்ஜெட் மீதான பதிலுரையை தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையின் மீதான பதிலுரையையும் அதிமுக புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது