

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்யும் மசோதாவை, மத்திய அரசு நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று திமுக எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்கும்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இருக்காது என மத்திய அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அளவிற்கு உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தொகுதிகளை மறுவரையறை செய்யும் தற்போதைய விகிதம் அப்படியே தொடரும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.