

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை குறித்த பிரச்சினை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை எதிர்த்து இன்று கறுப்பு கொடியேற்றும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.
மேலும் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆவண நகலை முதல்வர் தீயிட்டு எரித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சற்றுமுன் தனது எக்ஸ் தள கணக்கில், தமிழகம் எங்கும் பரவட்டும் போராட்ட நெருப்பு என பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் எக்ஸ் பதிவில், “தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழகம் எங்கும் பரவட்டும் போராட்ட நெருப்பு! பாசிச பாஜகவின் அகங்காரம் வீழ்த்தப்படட்டும்! அன்று, தமிழகத்தில் இருந்து எழுந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட நெருப்பு டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணியும் வரை அந்த நெருப்பு அடங்கவில்லை.
இன்று, தமிழர்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கத் துடிக்கும் இந்த கறுப்புச் சட்டத்தின் நகலை எரித்து, அந்தப் போராட்ட நெருப்பை நான் மீண்டும் மூட்டியுள்ளேன். இந்த நெருப்பு இப்போது திராவிட நிலமெங்கும் பரவும்.
இது கொழுந்துவிட்டு எரியும், சீறிப் பாயும், பாஜகவின் அகங்காரத்தை மண்டியிடச் செய்யும்” என முதல்வர் பதிவிட்டுள்ளார்.