

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், செல்லூர் ராஜூவை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொணடார் அண்ணாமலை. அப்போது அண்ணாமலையை முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டு செல்லூர் ராஜூ பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் மேற்கொண்ட பிரச்சாரத்தில், 'முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை' என செல்லூர் ராஜூ பேசினார். இதற்கு தேவர் அமைப்புகள் பலவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
அதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் செல்லூர் ராஜூ, அண்ணாமலையை தேவருடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில், “செல்லூர் ராஜூவின் நகைச்சுவை பேச்சிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. தேவர் ஐயாவை அவமதித்த செல்லூர் ராஜுவிற்கு, சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதி மக்கள் தக்க பதிலடியை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.