

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை திட்டத்தைக் கொண்டு வர நேற்று முன்தினம் மக்களவலயில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்த வாக்கெடுப்பில் போதுமான அளவில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கிடைக்காததால், இந்த மசோதா தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைப் பெற்றது திமுகவின் முயற்சிக்கு கிட்டிய வெற்றி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சற்று முன் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் நிறைவேற்ற தனி நபர் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மட்டுமே எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு அளித்துள்ளன.
இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.