

தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மார்ச் 15ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இவ்விதிகளின்படி தமிழ்நாட்டில் ரூ.50,000-க்கும் மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றால், அதற்கு தகுந்த ஆதாரம் இருக்க வேண்டும்.
ஒருவேளை ஆதாரம் இல்லையென்றால், பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும் மருத்துவ தேவைக்காக பணம் எடுத்துச் செல்லப்பட்டால், அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் வழியாகவும் காட்டலாம் என நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பறிமுதல் செய்ததை திரும்ப பெற மாவட்டந்தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் ஒரு முக்கியமான நிவாரிணியாக அமையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) தலைமையில் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொதுவாக மாவட்ட ஆட்சியரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
யாருக்குப் பலன்:
உரிய ஆவணங்கள் இருந்தும், பறக்கும் படையினரால் (Flying Squads) ரொக்கப் பணம், நகைகள் அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டவர்கள் இந்தக் குழுவை அணுகி, தங்கள் குறைகளை கூறலாம்.
நடைமுறை:
பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீது மற்றும் அதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், குறை தீர்ப்புக் குழு அவற்றை ஆய்வு செய்து உடனடியாகப் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படை பணியில் உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகளும் இதற்காகவே அமலுக்கு வந்துள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் சிலர் பாதிக்கப்படுவதால், அவர்களது பணத்தை மீட்க தேர்தல் ஆணையம் குறை தீர்ப்புக் குழுக்களை தற்போது அமைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் இழந்த பணத்தை தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ள முடியும்.