

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இன்று காலை சென்னையில் 10 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், பணப் பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில் வருமான வரித் துறையினர், தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பான பத்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
ஜாபர் சாதிக்கின் பட்டினப்பாக்கம் வீடு, அண்ணா சாலையில் உள்ள விடுதி, எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் கீழ்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் முடிவுக்கு பின்னரே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரும், தொழில அதிபருமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஜாமினில் வெளிவந்த நிலையில், இன்று காலை முதல் இவருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.