

மேற்காசிய நாடுகளில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், ஹார்மூஸ் நீரிணையை திறப்பதும் மூடுவதுமாக ஈரான் அரசின் நிலைப்பாடு நிலையற்றதாக இருக்கிறது.
இரண்டு முறை பேச்சு வார்த்தை நடந்தும் போருக்கு முடிவு கிடைக்காத நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது வார்த்தை போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அணு ஆயுதத் தயாரிப்பை ஈரான் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஈரான், டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கூறுகையில், “அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை ஈரான் கடுமையாக கண்டிக்கிறது. ஒரு நாட்டின் உரிமை மற்றும் இறையாண்மையை தடுக்கும் அதிகாரம் இங்கே யாருக்கும் கிடையாது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் இருந்தால், அமைதிப் பேச்சுவார்த்தையில் எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க வேண்டும்” என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.