வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், திமுக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் வினோத் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், திமுக வழங்கிய வாய்ப்பை தனது தந்தையும், அமைச்சருமான காந்திக்கு அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.
வினோத் காந்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், “சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய திமுக தலைவருக்கும், அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
ஆனால் எனது தந்தையார் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதால், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மரியாதையுடன் அந்த வாய்ப்பை என் தந்தைக்கு அளிக்கிறேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, ஆதரவு தந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதால், உற்சாகத்துடன் சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்” என வினோத் காந்தி தெரிவித்துள்ளார்.