

அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், அடுத்த இரு வாரங்களுக்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் போர் நிறுத்தத்திற்கு ஈரான் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையால் தான், 10 நிபந்தனைகளுடன் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு வாரங்களுக்கு ஹார்மோஸ் சிலந்தி திறக்கப்படும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி நிரந்தர போர் நிறுத்தம் குறித்து, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2 வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதித்துள்ள நிலையில், அதில் மிக முக்கிய நிபந்தனையாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கடக்கும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதன்படி இனி ஹார்மூஸ் ஜலசந்தியை சுங்கச் சாவடியாக பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. ஒரு கப்பல் ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க 2 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.5 கோடி வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது ஈரான்.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த போரினால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்தக் கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து தான் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.