தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று 108 தொகுதிகளில் வெற்றியை ஈட்டியது. இருப்பினும் ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழலில், ஆதரவு கேட்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் முதல் கட்சியாக தவெக-விற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளித்தது.
இந்நிலையின் தவெக-வின் பலம் 112 ஆக உயர்ந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க கூடுதலாக 6 இடங்கள் தேவை என்ற சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இன்று விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின. இந்தக் கூட்டத்தின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவளிப்பதாக தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இரு கட்சிகளிலும் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ள சூழலில் தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்தது. இந்நிலையில் விசிக வெளியிலிருந்து ஆதரவு தர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எடுத்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு பொறுப்பு ஆளுநரை சந்திக்க மூன்றாவது முறையாக விஜய் சற்றுமுன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை தற்போது விஜய்க்கு கிடைத்துள்ள நிலையில், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஆளுநரை சந்தித்து, தனிப்பெரும்பான்மை இருப்பதை விஜய் நிரூபித்துள்ளார். இதன்படி நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ளார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளே தற்போது ஆதரவு அளித்துள்ளன. திமுக ஆட்சியில் இல்லாத சூழலிலும், திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கும் என்ற சூழல் தற்போது உருவாக்கியுள்ளது