

உலகளவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மின்சார வாகனங்கள், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைக்கவும் மின்சார வாகன விற்பனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
டெலிவரி வேலையில் ஈடுபடுவோருக்கு மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு மானியமும் அளிக்கப்படுகிறது. மின்சார வாகனங்களில் கார்களை விடவும் பைக்குகள் தான் அதிகம் விற்பனையாகி வருகின்றன. மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கிட்டத்தட்ட பெட்ரோல் பைக்குகளுக்கு நிகராகவே இருக்கிறது.
இதற்கு மிக முக்கிய காரணமே, இதில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி தான். இந்நிலையில் லித்தியம் பேட்டரிக்கு பதிலாக விலை குறைந்த மாற்று பேட்டரியைக் கண்டுபிடித்துள்ளது சீனா.
மின்சார வாகனப் பயன்பாட்டில் பேட்டரி தரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் வாகனத்தின் ஆயுள் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். ஆனால் தரமான பேட்டரிக்கு ஏற்ப, அதன் விலையும் சற்று அதிகமாக இருக்குமல்லவா!
இந்நிலையில் தரமான பேட்டரி கொண்ட மின்சார இருசக்கர வாகனம், மிகக் குறைந்த விலைக்கு கிடைத்தால் எப்படி இருக்கும். அதுவும் கிட்டத்தட்ட சைக்கிளின் விலைக்கே கிடைத்தால், அதன் சந்தை விற்பனை ராக்கெட் வேகத்தில் உயருமல்லவா!
ஆம், அப்படி ஒரு பேட்டரியைத் தான் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்டரி, முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் விலையும் குறைவு தான்.
லித்தியம் பேட்டரியை காட்டிலும் இரும்பு பேட்டரி 80% விலை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரும்பு பேட்டரியைக் கொண்ட மின்சார இருசக்கர வாகனம், சந்தையில் விற்பனைக்கு வரும் போது, அதன் விலை சைக்கிளின் விலைக்கு நிகராக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மேலும் மிகவும் மலிவான விலைக்கு இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இ-ஸ்கூட்டர் பயன்பாட்டுக்கு வரும் போது, தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய வரலாறே படைக்கப்படும்.