

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், இளநீருக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.25 முதல் ரூ.40-க்கு கிடைக்கும் இளநீர், தற்போது கோடை காலத்தை ஒட்டி பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.
தற்போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு இளநீர் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. இளநீரின் இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோடை காலங்களில் அதிக வெயில் நிலவும் என்பதால் இளநீர், நுங்கு மற்றும் பதநீர் உள்ளிட்ட இயற்கை பானங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஒரு பனை நுங்கின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் ஒரு இளநீர் ரூ.120 வரை விற்பனையாவது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
கோடை காலத்தில் நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக தேங்காய்கள் அதிகளவில் உதிர்கின்றன. அதோடு வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் இளநீருக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது இளநீரின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால், தென்னை விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உற்பத்தி குறைந்திருப்பதால், அதிகளவு லாபம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
தென்னை மரங்களில் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விடவும் தற்போது இளநீர் உற்பத்தி 25% குறைந்துள்ளது.
உள்ளூரில் இளநீர் வரத்து குறைந்திருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரிக்கிறது. குறிப்பாக பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தரமான இளநீர் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாகவும் விலை உயர்வு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கோடை காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் ஒரு இளநீரின் விலை ரூ.30 முதல் ரூ.40 வரை அதிகமாக விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஒரு மாத காலத்திற்கு இளநீர் அதிக விலைக்கே விற்பனையாகும் எனத் தெரிகிறது. கோடை காலம் முடிந்த பிறகே இதன் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.